புலிகளை பிளவுபடுத்திய ரணில் எமது கட்சியையும் இரண்டாக்கி விட்டார்: நாமல் ராஜபக்ஷ ஆவேசம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உதவியதன் மூலம் கட்சியை இரண்டாகப் பிளவுபடுத்தியமையே எமக்குக் கிடைத்த பரிசு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்தார்.

கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாங்கள் முழு ஆதரவை வழங்கினோம், அவர் எமக்கு ஒத்துக்கொள்ளாத விடயங்களைச் செய்த போதும் இன்று வரை நாங்கள் எதுவும் கூறவில்லை. ஆனால், கட்சி இரண்டாகப் பிளவுபட்டதுதான் நமக்குக் கிடைத்த பரிசு. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உடைத்தது.

நல்லாட்சி அரசாங்கத்தை உடைத்தது. மக்கள் விடுதலை முன்னணியை உடைத்தது. விடுதலைப் புலிகள் அமைப்பையும் உடைத்தார்.  இதுதான் அவரது வழக்கம் என்றார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒருபோதும் அரசாங்கத்திற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தவோ அல்லது நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதற்கோ எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை முழுமையாக ஆதரித்தமைக்காக கட்சிக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய பரிசு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் ஏற்பட்ட பிளவு. எவ்வாறாயினும் நாங்கள் எங்கள் பொறுப்புகளை நிறைவேற்றியுள்ளோம். எதிர்காலத்தில் சிறந்த அரசியல் தீர்மானங்களை எடுப்போம்’ என அவர் மேலும் தெரிவித்தார்