எல்லை கடந்து மீன்பிடிக்க செல்லவேண்டாமென தமிழக மீனவர்களிற்கு அரசினால் பகிரங்க அறிவிப்பு

இலங்கை கடற்பரப்பினுள் மீன்பிடிக்க செல்லவேண்டாமென தமிழக மீனவர்களிற்கு அரசினால் பகிரங்க அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் நிலையில் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மீது , ஆபத்தான முறையில் படகினை செலுத்தி, கடற்படை மாலுமிக்கு மரணத்தை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களை எதிர்வரும் 08ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது  நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய படகொன்றினை வழிமறித்து, படகில் இருந்தவர்களை கடற்படையினர் கைது செய்ய முற்பட்ட வேளை கடற்படை மாலுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

படகினை ஆபத்தான முறையில் செலுத்தி கடற்படை மாலுமிக்கு மரணத்தை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் மன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து, 10 மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.