மன்னாரில் 2 ஆம் கட்ட காற்றாலை செயற்றிட்டம் :  மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவை கண்டித்த  சாள்ஸ் நிர்மலநாதன்

மன்னார் மாவட்டத்தில் 2 ஆம் கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை செயற்றிட்டம் மற்றும் கனிய மணல் அகழ்வு களுக்கு எதிராக இன்றைய தினம் புதன்கிழமை  மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பல்வேறு தரப்பினரால் எதிர்ப்புக்கள் முன் வைக்கப்பட்டது.

எனினும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவினால் எவ்வித அனுமதியும் வழங்கப்படாமல் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளிற்கு எதிராக மக்களே நடவடிக்கை எடுக்க வேண்டும் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரனின் நெறிப்படுத்தலில் அபிவிருத்தி குழுவின் தலைவரான இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையில் குறித்த கூட்டம் இடம் பெற்றது. இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், கே.திலீபன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.இதன் போது பல்வேறு விடையங்கள் குறித்து ஆராயப்பட்டது. மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு மீனவ அமைப்புகள் மற்றும் பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஆகியவை எதிர்ப்பை தெரிவித்தனர். மன்னார் தீவு பகுதிக்குள் கணிய மணல் அகழ்வு அல்லது ஆராய்ச்சி நடவடிக்கைகள் இனி இடம் பெற கூடாது என பல முறை தெரிவிக்கப்பட்ட போதும், குறித்த அகழ்வு தொடர்பாக அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கதைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும் கடந்த அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது காற்றாலை மின் செயற் திட்டம் தொடர்பாக ஜனாதிபதியிடம் பேசுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்த போதும் இதுவரை எவ்வித முயற்சிகளும் முன்னெடுக்கப்பட வில்லை என விசனம் தெரிவித்துள்ளனர். மன்னார் தீவில் கணிய மணல் அகழ்வு முன்னெடுக்கப்பட கூடாது என்பதே அனைவரினதும் கோரிக்கை.எனினும் கணிய மணல் அகழ்வை முன்னெடுக்கும் நிறுவனத்தை அழைத்து கலந்துரையாடியமையை ஏற்றுக் கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.குறித்த விடயத்தை திரும்ப திரும்ப கதைப்பதில் அர்த்தம் இல்லை. அதற்கான அனுமதியை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு வழங்காத நிலையில், கொழும்பில் அனுமதி வழங்குவதாக இருந்தால் இந்த மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் எதற்கு ? என்றும் அவ்வாறு கொழும்பில் அனைத்திற்கும் அனுமதி வழங்கினால் இனிமேல் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை நடத்துவதில் அர்த்தம் இல்லை என்றும், இனிமேல் நடத்த வேண்டாம் என்றும் அவர் பகிரங்கமாக கோரிக்கை விடுத்தார்.

மேலும் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது. குறித்த கூட்டத்தில் திணைக்கள தலைவர்கள், முப்படையினர், பிரதேச செயலாளர்கள், வட மாகாண திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.