ஐசிசி ரி 20  உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதத் தாக்குதல் நடாத்தப்படும் என அச்சுறுத்தல்

அமெரிக்காவில் ஆரம்பமாகவுள்ள ஐசிசி ரி 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதத் தாக்குதல் நடாத்தப்படும் வகையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தாக்குதலுக்கான அச்சுறுத்தலை விடுக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள வடிவமைக்கப்பட்ட படமொன்று தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நியூயார்க் கிரிக்கெட் மைதானத்தில் துப்பாக்கியை முதுகில் சுமந்தவாறுஇ முகமூடி அணிந்த நபரொருவர், மைதானத்தை பார்த்துக் கொண்டிருக்கும் வகையில் இந்த படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த படத்திலுள்ள நபரின் மீது எழுதப்பட்டுள்ள வசனமே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. நீங்கள் போட்டிக்காக காத்திருங்கள்…’ என்று எழுதப்பட்டு, ரத்தச் சிவப்பு நிறத்தில் – ‘நாங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம்  என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், மைதானத்தில் ட்ரோன் கமராக்கள் பறக்கும் வகையிலும் இந்த படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜுன் மாதம் 09ம் திகதி நாசாவ் ஸ்டேடியத்தில், இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறவுள்ளது. இந்த விடயம் தொடர்பில், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊடகப் பேச்சாளர் கருத்து தெரிவித்துள்ளார். போட்டிக்கு வரும் அனைவரின் பாதுகாப்பும் எங்கள் முதல் முன்னுரிமையாகும், மேலும் எங்களிடம் விரிவான மற்றும் வலுவான பாதுகாப்புத் திட்டம் உள்ளது.’ என அவர் கூறியுள்ளதாக சர்வதேச ஊடக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

ஐசிசி ரி 20  உலகக் கிண்ணப் போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளை மையமாகக் கொண்டு ஜுன் முதலாம் திகதி முதல் ஜுன் 29ம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.