பப்புவா நியூகினியா மண்சரிவில் சிக்கி 300 பேர் உயிரிழப்பு

பப்புவா நியூகினியாவில் நேற்றைய தினம் பெய்த கன மழையினால், அங்குள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் திடீரென மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட இந்த மண்சரிவினால் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மண்ணில் புதையுண்டனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பேரிடர் மீட்பு படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த மண்சரிவில் சிக்குண்டு சுமார் 300க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திடீரென ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ளவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.