மோடி அரசின் மேலும் ஒரு ஊழல் கொள்கை அம்பலமாகி உள்ளது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.

தேர்தல் பத்திரங்களை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு காங்கிரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது.  தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. தேர்தல் பத்திர நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் பாஜகவுக்காக கொண்டுவரப்பட்டதே தேர்தல் பத்திரங்கள் என கபில் சிபல் குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் பத்திரங்களை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஜனநாயகத்தின் மீது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் என்பது தேர்தலுக்கு சிறிதும் தொடர்பில்லாதவை. கடந்த 5 ஆண்டுகளில் பாஜக தேர்தல் பத்திரங்கள் மூலம் சுமார் ரூ.6, 000 கோடிக்கு மேல் நன்கொடை பெற்றுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நிதியை வைத்து பல மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கை மேற்கொண்டதாக கபில் சிபல் குற்றம் சாடினார்.

லஞ்சம் மற்றும் கமிஷன் வாங்குவதற்காக பாஜக தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்தியதாக ராகுல் காந்தி குற்றம் சாடினார். தேர்தல் பத்திரங்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளதன் மூலம் மோடி அரசின் மேலும் ஒரு ஊழல் கொள்கை அம்பலமாகி உள்ளது எனவும் கூறினார்.