நுவரெலியா கிரகரி வாவி குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்த நடவடிக்கை.

நானுஓயா நிருபர் செ.திவாகரன்

கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பணிப்புரைக்கமைய இலங்கையில் தலைசிறந்த சுற்றுலா இடமான நுவரெலியா நகரில் கிரகரி வாவியினை அபிவிருத்தி செய்யும் பணிகள் நுவரெலியா மாவட்ட செயலாளர் திரு.நந்தன கலபொட தலைமையில் செவ்வாய்க்கிழமை (17) ஆரம்பமானது.

நுவரெலியாவிற்கு நாளாந்தம் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றன இதில் கிரகரி வாவி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த சொர்க்கமாக விளங்குகிறது. எனினும் மேலும் நுவரெலியா கிரகரி வாவியினை அபிவிருத்தி செய்யும் திட்டம் நுவரெலியா மாவட்ட செயலாளர் தலைமையில் ” கிரீன் இன்டஸ்ட்ரியல்” தனியார் நிறுவனத்தின் அனுசரனையில் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டது.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்கள் விடுமுறையைக் கழிக்க நுவரெலியா பகுதியைத் தேர்வு செய்கிறார்கள், குறுகிய வார விடுமுறை முதல் நீண்ட விடுமுறை வரை, கிரகரி வாவியின் சுற்றுச்சூழல் மண்டலத்தில் ஓய்வு நேரத்தை செலவிடுவதே இதன் முதன்மை நோக்கமாகும் .

எனினும் கிரகரி வாவி முழுவதும் பாசி செடிகள் படர்ந்து வாவி முழுவதும் குவியல் குவியலாக உள்ளதை அகற்றி கரைகளில் உள்ள புதர்களை அகற்றியும் வாவி முழுவதும் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகளையும் கழிவு பொருட்களையும் அகற்றி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது குறிப்பாக வாவியிலும் , நடைப்பாதையில் கிடக்கும் கழிவுகள் காரணமாக படகு சவாரி, குதிரைவண்டி, துவிச்சக்கரவண்டி சவாரி போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலையை கருத்திற் கொண்டு நுவரெலியா மாவட்ட செயலகம் கிரகரி வாவியினை சுத்தம் செய்யும் வேலைத்திட்டத்தினை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய நுவரெலியா மாவட்ட செயலாளர் திரு.நந்தன கலபொட நுவரெலியா மாநகர சபைக்கு மாவட்ட செயலாளர் காரியாலயத்தினால் இதற்கு முன்னரும் பல தடவைகள் பணம் வழங்கப்பட்ட போதிலும் அந்த பணம் உரிய முறையில் முகாமைத்துவம் செய்யப்படாமல் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அது எங்கள் மனதை மிகவும் வருத்தமளிக்கின்றது.

கௌரவ ஜனாதிபதி அவர்களின் கடந்த நுவரெலியா விஜயத்தின் போது நுவரெலியா அபிவிருத்தி திட்டங்களின் கீழ் கிரகரி வாவிக்கு விசேட இடம் வழங்கப்பட்டது. ஆனால் இப்போது சுற்றுலா தலமான நுவரெலியாவில் கிரகரி வாவி படிப்படியாக மறைந்து வருவது தெரிய வருகிறது இதற்கு முன்னரும் நுவரெலியா மாநகர சபைக்கு 150 இலட்சம் ரூபாவை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக கிரகரி வாவி பாயும் பிரதான கால்வாயான தலகல ஓயாவை அபிவிருத்திக்காக வழங்கினோம். அந்த திட்டத்தின் கீழ் தலகல ஓயா புனரமைப்பு நுவரெலியா நகரின் வெள்ளப்பெருக்கை தடுத்து நிறுத்தியது. ஆனால் கிரகரி வாவியில் திண்ம மற்றும் திண்மக்கழிவுகள் செல்வதை தடுக்கும் திட்டம் முற்றாக தோல்வியடைந்தது.அதை சரியாக செய்திருந்தால் தற்போது சுத்தம் செய்ய தேவையே இருந்திருக்காது. மீண்டும் வாவியினை சுத்தம் செய்து மேம்படுத்த வேண்டும்.

இந்த திட்டத்தை நாம் இன்று ஆரம்பித்தாலும், தற்போதைய பொருளாதார சூழ்நிலையால் அதற்கான நிதியை அரசாங்கத்தால் வழங்க முடியவில்லை. இந்த திட்டத்திற்காக எந்த இலாபத்தையும் எதிர்பார்க்காமல் “கிரீன் இன்டஸ்ட்ரியல்” தன்னார்வத்துடன் இணைந்து கிரகரி வாவியின் வளர்ச்சிக்கு நிதியுதவி வழங்கியுள்ளது தற்போதைய வானிலைக்கு ஏற்ப, அடுத்த மூன்று மாதங்களுக்குள், அனைத்து வண்டல் மற்றும் கழிவுகளை அகற்றி, கிரகரி வாவியினை சுற்றுச்சூழல் சொர்க்கமாக மாற்றி, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உருவாக்க தயாராக உள்ளோம் என்றார்.