பொலிஸார் போன்று ஆள்மாறாட்டம் செய்யும் கொள்ளையர்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

 

பொலிஸ் உத்தியோகத்தர்களைப் போன்று பாவனை செய்யும் நபர்களினால் மேற்கொள்ளப்படும் வீடுகளில் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறிக்கொண்டு வீடுகளை சோதனையிடும் நபர்கள் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி), பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அல்லது வேறு ஏதேனும் விசேட பிரிவினருடன் இணைக்கப்பட்டிருந்தால் தவிர, சிவில் உடையில் உள்ள அதிகாரிகளால் இத்தகைய சோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்று காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

தேடுதல் நடத்தப்பட வேண்டியிருந்தால், அடையாளச் சான்றாக உத்தியோகபூர்வ பொலிஸ் அடையாளங்களைக் கோருவதற்கு பொதுமக்களுக்கு அதிகாரம் இருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

பொதுவாக சோதனைக்கு முன்னர் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொதுமக்கள் இது தொடர்பாக தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறும், சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.