அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க நடிகர் விஜய் திட்டம்.

தமிழகத்தில்  நடந்து முடிந்த பிளஸ் 2 பரீட்சையின் பெறுபேறுகள்  கடந்த 8 ஆம் திகதி வெளியாகியிருந்தன. இதில் 94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இந்நிலையில் இப் பரீட்சையில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டி, கல்வி உதவித்தொகை வழங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், இதன் காரணமாக  மாவட்டம் தோறும் மாணவர்களின் விவரங்களை அனுப்ப விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள்  வெளியாகியுள்ளன.

அடுத்து, 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பின், அவர்களின் விபரங்களையும் திரட்டி, வரும் 30ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும, விஜய் அளிக்கும் உதவிகள் சேரும் வகையில், இந்த நிகழ்ச்சி திட்டமிடப்படுகிறது.

இதற்கான நிகழ்ச்சி, அடுத்த மாதம் சென்னை அல்லது திருச்சியில் நடத்தப்பட உள்ளதாகவும் அதில் கூடும் ரசிகர்களுக்கு மத்தியில், மாணவ – மாணவியருக்கு, தன் கையால் உதவித் தொகைகளை, விஜய் வழங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.