மஸ்கெலியா சாமிமலை ஓல்டன் பகுதியில் கடும் மழை – வெள்ளத்தில் சிக்கிய குடியிருப்புகள்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா – சாமிமலை ஓல்டன் தோட்டப் பகுதியில் பெய்து வரும் கடும் மழையினால் ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்து, ஆற்றங்கரையை அண்மித்த குடியிருப்புகள் வெள்ளநீரால் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, ஓல்டன் ஆற்றங்கரைப் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகள் மற்றும் ஆற்றடி பிள்ளையார் ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.
தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையினால் காட்டாறு மற்றும் சிற்றாறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஓல்டன் பகுதியில் இதுபோன்ற வெள்ளப்பெருக்கு ஏற்படுவது இதுவே முதல் முறையல்ல. கடந்த காலங்களிலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகளின்போது குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததுடன், ஆலய வளாகமும் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த 2023ஆம் ஆண்டு ஓல்டன் தோட்டத்தின் 10ஆம் இலக்கப் பிரிவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது ஆற்றடி பிள்ளையார் ஆலயம் வெள்ளத்தில் மூழ்கியதுடன், அப்பகுதியில் வசித்த 24 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 150 பேர் தற்காலிகமாக வீடுகளை விட்டு வெளியேறியிருந்தனர்.
இந்நிலையில், தற்போதைய மழை காரணமாகவும் ஆற்றின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடிய சாத்தியம் காணப்படுவதால், ஆற்றங்கரை மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.
வெள்ளநிலைமை மேலும் மோசமடையும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆற்றங்கரை குடியிருப்புகளின் பாதுகாப்பு, வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நீர்வழிப் பாதைகளை முறையாக பராமரிப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.


