கந்தளாய் குளத்தின் கீழ் 22,000 ஏக்கரில் சிறுபோக நெல் அறுவடை தீவிரமாக ஆரம்பம்!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

திருகோணமலை மாவட்டத்தின் பிரதான நீர்ப்பாசன மூலாதாரமான கந்தளாய் குளத்தின் நீரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இம்முறை சிறுபோக நெற்செய்கையின் அறுவடைப் பணிகள் தற்போது உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளன.
சுமார் 22,000 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த நெற்செய்கையின் அறுவடைப் பணிகளில் விவசாயிகள் தற்போது மிக மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தீவிரமடையும் அறுவடைப் பணிகள்
கந்தளாய் குளத்தின் கீழ் நீர்ப்பாசனம் பெறும் முக்கிய பகுதிகளான:
பரட்டைக்காடு
செட்டிக்காடு
வான் எல
வட்டுகச்சி
நாலாம் வாய்க்கால்
தம்பலகாமம்
ஆகிய பிரதேசங்களில் நவீன அறுவடை இயந்திரங்கள் மூலம் நெல் அறுவடை செய்யும் பணிகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அரசாங்கத்தின் நியாயமான உத்தரவாத விலைக்கு விவசாயிகள் வரவேற்பு .
இம்முறை சிறுபோகச் செய்கையில் சாதகமான விளைச்சல் கிடைத்துள்ள நிலையில், விவசாயிகள் தங்கள் கடின உழைப்பிற்கு ஏற்றவாறு நியாயமான உத்தரவாத விலையை அரசாங்கம் நிர்ணயித்து பெற்றுக்கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
“தற்போது சந்தையில் நிலவும் விலையினை விட, எமது கடின உழைப்பிற்கு ஏற்றவாறு நெல்லுக்கு நியாயமான உத்தரவாத விலையை அரசாங்கம் பெற்றுக்கொடுத்துள்ளது.”
— பிரதேச விவசாயிகள்
நல்ல விளைச்சலுடன் சேர்த்து, அரசாங்கம் உரிய நியாயமான உத்தரவாத விலையையும் உறுதி செய்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

