மட்டக்களப்பு காத்தான்குடியில் கையடக்க தொலைபேசி விவகாரத்தில் ஏற்பட்ட கைகலப்பு சண்டையினால் சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்ட 11 பேரில் நேற்று மாலை 9 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் இருவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள கையடக்க தொலைபேசிகள் பழுது பார்க்கும் வர்த்தக நிறுவனமொன்றில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் ஒருவர் பழுது பார்ப்பதற்கு கொடுத்த கையடக்க தொலைபேசியிலுள்ள ஆவணங்களை திருடி தவறாக பயன்படுத்த முற்ப்பட்டுள்ளார் என தெரிவித்து குறித்தகையடக்க தொலைபேசிகள் பழுது பார்க்கும் வர்த்தக நிறுவனமொன்றின் உரிமையாளருக்கும் கையடக்க தொலைபேசியை கொடுத்தவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பின்னர் கை கலப்பு சண்டையாக மாறியுள்ளதுடன் இதையடுத்து இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த விவகாரம் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து சனிக்கிழமை மாலை இதனோடு சம்பந்தப்பட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மூன்று தனித்தனி வழக்குகளின் கீழ் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில், தாக்குதல் சம்பவம் தொடர்புடைய 9 பேரை தலா ஒரு இலட்சம் ரூபாய் ஆட்பிணையில் விடுவிக்க நீதிபதியினால் உத்தரவிடப்பட்டது.
அதேவேளை, போன் கடை உரிமையாளர் மீது பதிவு செய்யப்பட்ட கப்பம் கோரல் தொடர்பான முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட வழக்கில், போன் கடை உரிமையாளர் மற்றும் மேலும் ஒருவர் என ஆகிய இருவரை எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
இந்த மூன்று வழக்குகளும் மேலதிக விசாரணைக்காக எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதி மீண்டும் மட்டக்களப்பு நீதி மன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

