கொழும்பில் அதிரடி: 19 கோடி ரூபாய் போலி அமெரிக்க டொலர்களுடன் பெண் கைது!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

கொழும்பு, வெல்லம்பிட்டி பகுதியில் சுமார் 19 கோடி ரூபாய் பெறுமதியான போலி அமெரிக்க டொலர் நோட்டுகளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், வெல்லம்பிட்டி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் முன்னெடுக்கப்பட்ட விசேட அதிரடி சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
அங்கு தங்கியிருந்த பெண்ணின் வசமிருந்த போலி வெளிநாட்டு நாணயங்களை சோதனையிட்ட காவல்துறையினர், அவற்றை முழுமையாகக் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போலி அமெரிக்க டொலர் நோட்டுகளின் மொத்தப் பெறுமதி இலங்கை ரூபாயில் சுமார் 19 கோடியைத் (190 மில்லியன்) தாண்டும் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவ்வளவு பெரிய அளவில் போலி வெளிநாட்டு நாணயங்கள் ஒரே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டமையானது குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த பெண்ணைக் கைது செய்துள்ள காவல்துறையினர், இந்த போலி நாணய வலையமைப்பின் பின்னணியில் உள்ள ஏனைய நபர்களைக் கண்டறியும் நோக்கில் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன், கைப்பற்றப்பட்ட போலி டொலர்கள் உள்நாட்டிலேயே அச்சிடப்பட்டவையா அல்லது வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்ட கும்பல்களால் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டவையா என்ற பல்வேறு கோணங்களிலும் சர்வதேச தொடர்புகள் குறித்தும் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.