அரசாங்கத்தை அடித்து விரட்டுவதற்கு முன் தகுதியானவர்களிடம் நாட்டை ஒப்படையுங்கள்; பொறுப்பேற்க திலீத் தயார் – சர்வஜன பலய தொழில் வல்லுநர்கள் சங்கம்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் நாட்டின் பொருளாதார நிலை குறித்து சர்வஜன பலய தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் அழைப்பாளர் நளின் பத்திரண காரசாரமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இந்த அரசாங்கத்தால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்பதை நாட்டு மக்கள் இப்போது தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்றும், தேர்தல் மூலம் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்களுக்கே தற்போது இவர்களின் இயலாமை மற்றும் வாய்ச் சவடால்கள் குறித்து நன்கு தெரியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் தனது தோல்விகளை மேலும் மேலும் பொய்களைக் கூறி மூடிமறைக்க முயலக் கூடாது எனத் தெரிவித்த அவர், பொதுமக்கள் வீதிக்கு இறங்கி அரசாங்கத்தை அடித்து விரட்டும் வரை அல்லது அரசாங்கம் ஒளிந்து கொள்ளும் நிலை ஏற்படும் வரை காத்திருக்காமல், நாட்டை நிர்வகிக்கக் கூடிய தகுதியான ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தங்களது தலைவர் திலீத் நாட்டை இப்போதே பொறுப்பேற்று வழிநடத்துவதற்குத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள நளின் பத்திரண, நாட்டை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரக் கூடிய ஆற்றல் அவரிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே, மேலும் காலத்தைக் கடத்தாமல் நாட்டைத் தகுதியானவர்களிடம் ஒப்படைத்து, மக்களை மேலும் வறுமை மற்றும் துன்பப் படுகுழியில் தள்ளும் இந்தச் செயல்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு அவர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

