“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அரசியல் சதி என்ற குற்றச்சாட்டு அபாண்டமானது” – முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலானது, கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சி அதிகாரத்திற்குக் கொண்டு வருவதற்காக நடத்தப்பட்ட ஒரு அரசியல் சதித்திட்டம் எனக் காட்டுவதற்கு சில தரப்பினர் முயற்சித்து வருவதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சியை ஒரு நிந்தனைக்குரிய செயல் எனத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக சுரேஷ் சலே என்பவர் தற்போது 180 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டு, 6க்கு 4 அளவிலான ஒரு குறுகிய அறைக்குள் அடைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார் என்றும், அங்கு அவர் மிகக் கடுமையான முறையில் சித்திரவதைகளுக்கும் வதைப்படுத்துதல்களுக்கும் உள்ளாக்கப்பட்டு வருவதாகவும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பல உயர்மட்ட விசாரணைக் குழுக்கள் மூலம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. உள்நாட்டில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு உள்ளிட்ட 6 பிரதான குழுக்கள் இதனை விசாரித்துள்ளன. அதேபோன்று, சர்வதேச ரீதியில் அமெரிக்காவின் எப்.பி.ஐ , இன்டர்போல், அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸ் மற்றும் ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸ் போன்ற முன்னணி புலனாய்வு அமைப்புகளும் தங்களது சுயாதீன விசாரணைகளை முன்னெடுத்திருந்தன. இந்த எந்தவொரு உள்நாட்டு அல்லது சர்வதேச புலனாய்வு அமைப்புகளின் விசாரணை அறிக்கைகளிலும், கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரோ அல்லது சுரேஷ் சலேயின் பெயரோ எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று அவர் உறுதியாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலானது ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, சஹரான் என்பவரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று என்பது அனைத்து விசாரணைகளிலும் திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் நகரில் உள்ள மசூதி ஒன்றில் இஸ்லாமியர்கள் மீது கத்தோலிக்கர் ஒருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்குப் பழிவாங்கும் நோக்கோடேயே, இலங்கையில் உள்ள தேவாலயங்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

அதேபோன்று, ஐரோப்பியர்கள் மீதான கோபத்தின் காரணமாக, அவர்களை இலக்கு வைத்தே கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதிகள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டதாக விசாரணைகளில் தெளிவாகத் தெரியவந்துள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.