அமெரிக்காவுக்குச் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்ட பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ்
Meiveli Media Team

பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக திங்கட்கிழமை அமெரிக்கா சென்றடைந்துள்ளனர். அமெரிக்கா சுதந்திரம் பெற்று 250 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் இந்தப் பயணம் அமைந்துள்ளது.
ஜொயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் விமான நிலையத்தில் தரையிறங்கிய மன்னரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் வெள்ளை மாளிகையில் வரவேற்றுள்ளனர். இரு நாட்டுத் தலைவர்களும் சிறிது நேரம் புகைப்படங்களுக்குத் தோன்றிவிட்டு, பின்னர் வெள்ளை மாளிகைக்குள் தனியார் தேநீர் விருந்தில் கலந்து கொண்டுள்ளனர். பின்னர் பிரித்தானிய தூதுவரின் இல்லத்தில் நடைபெற்ற தோட்ட விருந்தில் மன்னர் சார்ள்ஸ் கலந்துகொண்டுள்ளார். இதில் அமெரிக்க செனட்டர் டெட் க்ரூஸ், நிதிச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க பாராளுமன்றத்தில் மன்னர் சார்ள்ஸ் உரையாற்றவுள்ளார். சுமார் 20 நிமிடங்கள் நீடிக்கவுள்ள இந்த உரையில், கடந்த 250 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், முக்கியமான தருணங்களில் இரு நாடுகளும் ஒன்றிணைந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டுவார். பிரித்தானியா – அமெரிக்கா இடையிலான உறவை ‘மனித வரலாற்றின் மிகச்சிறந்த கூட்டணிகளில் ஒன்று’ என அவர் வர்ணிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி ட்ரம்ப் மன்னர் சார்ள்ஸை ஒரு ‘சிறந்த மனிதர்’ எனப் புகழ்ந்தாலும், பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மரின் அரசாங்கத்துடன் சில மோதல்களைக் கொண்டுள்ளார். ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிரித்தானியா போதிய ஆதரவு வழங்கவில்லை என ட்ரம்ப் அதிருப்தி கொண்டுள்ளார். பிரித்தானியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில்இ போக்லாந்து தீவுகள் விவகாரத்தில் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளக்கூடும் என பென்டகன் மின்னஞ்சல் ஒன்று கசிந்துள்ளமை உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. செப்டெம்பர் 11 தாக்குதலின் 25 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளார்.
வேர்ஜினியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பணிகளில் ஈடுபடுவோரைச் சந்தித்து மன்னர் கலந்துரையாடவுள்ளார். சனிக்கிழமை வொஷிங்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இந்தப் பயணம் நடைபெற்று வருகின்றது. 1956 ஆம் ஆண்டு சூயஸ் கால்வாய் நெருக்கடிக்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், மன்னரின் இந்தப் பயணம் ஒரு முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

