நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல் – மூன்று வீடுகள் தீக்கிரை 12 பேர் நிர்க்கதி.
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள பம்பரக்கலை PWD நெடுங்குடியிருப்பு பகுதியில் நேற்றைய தினம் (16) இரவு ஏற்பட்ட திடீர் தீப்பரவலால் மூன்று வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.
தீக்கிரையான மூன்று வீடுகளிலும் இருந்த 12 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில் வசிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த தீப்பரவல் காரணமாக, அந்த வீடுகளில் இருந்த பெறுமதியான உடமைகள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.
மேலும் தீ ஏற்பட்ட போது வீட்டில் இருந்தவர்கள் எரிவதை கண்டு கூச்சலிட்டதாகவும், அதன் பிறகு அயலவர்கள் மற்றும் தகவல் அறிந்த நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர், உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா காவல்துறையினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
தீயினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று சந்தித்து மேலதிக நடவடிக்கைகளை நுவரெலியா மாநகரசபை உறுப்பினர் சுப்பிரமணியம் ஆனந்தராஜ் கிராம சேவகரின் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றார்.

