தென்னக்கோனின் நியமனத்துக்கு சஜித்தும் பொறுப்புக்கூற வேண்டும் – சமன் ரத்னப்பிரிய தெரிவிப்பு
அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ள நிலையில் அதனை மறைப்பதற்கு பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருகிறது. அதன் ஒரு அங்கமாகவே பொலிஸ்மா அதிபரை பதவி நீக்கும் பிரேரணையை சபாநாயகருக்கு கையளித்திருக்கிறது. தேசபந்து தென்னகோனின் நியமனத்துக்கு சஜித் பிரேமதாசவும் பொறுப்புக்கூற வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் வியாழக்கிழமை (27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ள நிலையில் அதனை மறைப்பதற்கு பல்வேறு அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கு பிரேரணை ஒன்றை சபாநாயகருக்கு கையளித்திருக்கிறது.
ஆனால் இந்த பிரேரணை தொடர்பில் தேடிப்பார்க்காமல், அரசாங்கத்தின் இந்த பிரேரணைக்கு எதிர்க்கட்சி பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருக்கிறார். எந்த அடிப்படையில் சஜித் பிரேமதாச எவ்வாறு தெரிவித்தார் எனத் தெரியாது.
அதேநேரம் தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட சஜித் பிரேமதாசவின் நடவடிக்கையும் காரணமாகும். ஏனெனில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அப்போது பொலிஸ்மா அதிபராக இருந்த சி.டி விக்ரமரத்னவின் பதவியை நீடித்து, அதற்காக அரசியலமைப்பு பேரவையின் அனுமதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தபோது, அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் அவரது பிரதிநிதியுமே தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள். அந்த பின்னணியிலேயே தேஷபந்துவின் வருகை இடம்பெற்றது. அதனால் தேஷபந்துவின் நியமனத்துக்கு சஜித் பிரேமதாசவும் பொறுப்புக்கூற வேண்டும்.
அரசாங்கத்தின் செல்வாக்கு தற்போது குறைந்து வருகிறது. அரசாங்கத்துக்கும் அது நன்கு தெரியும். அரசாங்கம் ஆட்சிக்கு குறுகிய காலத்தில் 55ஆயிரம் பில்லியன் ரூபா கடன் பெற்றுள்ளது. ஆனால் அந்த பணத்தில் ஒரு அபிவிருத்தி வேலையாவது செய்திருக்கிறதாவெனக் கேட்கிறோம்.
நாட்டின் ஜாதிபதி மதஸ்தலங்களுக்கு செல்வதற்கு ஊடக பிரசாரம் எதற்கு என அநுரகுமார திஸாநாயக்க ஆரம்பத்தில் கேள்வி கேட்டு வந்தார்.
தற்போது அவர் தலதா மாலிகைக்கு செல்லும்போது முழு உலகுக்கும் காட்டும்வகையில் ஊடகங்களை அழைத்து செல்கிறார். அதனால் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தெரிவித்த விடயங்களை மறந்தே அரசாங்கம் செயற்பட்டு வருகிறது என்றார்.