பொருட்களின் விலைகளையும் சேவை கட்டணத்தையும் குறைக்க உள்ளூராட்சிமன்றங்களின் அதிகாரம் எதற்கு ?மரிக்கார் கேள்வி

அரசாங்கங்கள் தமது முழு ஆட்சி காலத்திலும் பெறும் கடனை இந்த அரசாங்கம் ஒரே ஆண்டில் பெறவிருக்கிறது. வட் வரியைக் குறைப்பதற்கும், மின் கட்டணத்தைக் குறைப்பதற்கும், எரிபொருள் விலையைக் குறைப்பதற்கு உள்ளுராட்சிமன்றங்களின் அதிகாரம் எதற்கு? என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கேள்வியெழுப்பினார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் புதன்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்று 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. ஆனால் வழங்கிய வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.

தற்போது உள்ளுராட்சி அதிகாரம் கிடைக்காவிட்டால் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் எனக் கூறிக் கொண்டிருக்கின்றனர். கடன் பெற்று நாட்டை நிர்வகிப்பதற்கு ஆட்சியாளர்கள் எதற்கு என கேள்வியெழுப்பியவர்கள் இன்று, வரவு செலவு திட்டதில் இடைவெளியை நிரப்புவதற்காக மாத்திரம் 7 பில்லியன் டொலர் கடன் பெற திட்டமிட்டுள்ளனர்.

ஏனைய அரசாங்கங்கள் தமது முழு ஆட்சி காலத்திலும் பெறும் கடனை இந்த அரசாங்கம் ஒரே ஆண்டில் பெறவிருக்கிறது. வட் வரியைக் குறைப்பதற்கும், மின் கட்டணத்தைக் குறைப்பதற்கும், எரிபொருள் விலையைக் குறைப்பதற்கு உள்ளுராட்சிமன்றங்களின் அதிகாரம் எதற்கு? தாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை மக்கள் உணர்ந்திருக்கின்றனர்.

இவ்வாறு உங்களை ஏமாற்றியவர்களுக்கு சிறந்த பாடத்தைக் கற்பித்து மக்கள் ஆணையின் பலம் என்ன என்பதை உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் அரசாங்கத்துக்கு காண்பிக்க வேண்டும். மாறாக இந்த தேர்தலிலும் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்தால் தம்மால் தொடர்ந்தும் மக்களை ஏமாற்ற முடியும் என்ற நிலைப்பாட்டுக்கு அரசாங்கம் வந்து விடும்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலிலும் அரசாங்கம் வெற்றி பெற்றுவிட்டால் அதன் பின்னர் பொருட்களின் விலைகளோ சேவைக் கட்டணங்களோ குறைக்கப்பட்ட மாட்டாது. எனவே ஐக்கிய மக்கள் சக்திக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும். அதனைவிடுத்து ஏனைய சிறிய கட்சிகளுக்கு வாக்களிப்பதால் எவ்வித பிரயோசனமும் இல்லை என்றார்.