தமிழர்களுக்கே வாக்களிக்க வேண்டும் :  தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் . தேர்தல் மாவட்ட வேட்பாளர் மிதிலைச்செல்வி  வேண்டுகோள்

தமிழ் மக்கள் தமது இருப்பை தக்க வைத்துக்கொள்ள தமிழர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் . தேர்தல் மாவட்ட வேட்பாளர் மிதிலைச்செல்வி ஸ்ரீபத்மநாதன் தெரிவித்துள்ளார்.  யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தமிழ் மக்கள் தமது இருப்பை தக்க வைத்துக்கொள்ள தமிழர்களுக்கே வாக்களிக்க வேண்டும். பெரும்பான்மை கட்சிகளுக்கு வாக்களிப்பது மிக ஆபத்தானது. அதேவேளை பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் இழப்புக்களை பெருமளவில் சந்தித்தது பெண்களே. அவர்களுக்கு உதவ வேண்டும்.

அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என மேலும் தெரிவித்தார். குறித்த ஊடக சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியில், யாழ் தேர்தல் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளரான சட்டத்தரணி வி. மணிவண்ணன் மற்றும் வேட்பாளர்களான சட்டத்தரணி உமாகரன் இராசையா, வரதராஜா பார்த்திபன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.