வன்னி தேர்தல் மாவட்டத்தில் பொதுத்தேர்தலில் 6 ஆசனங்களை கைப்பற்ற களமிறங்கும் 423 வேட்பாளர்கள்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் 47 கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் 4 சுயேட்சைக்  குழுக்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான சரத் சந்திர தெரிவித்தார்.

பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் கடந்த 4ஆம்  திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்று மதியம் 12 மணியளவில் நிறைவுக்கு வந்திருந்தது. அந்த வகையில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

அந்த வகையில் இம்முறை வன்னி தேர்தல் மாவட்டத்தில் 24 அரசியல் கட்சிகள், 27 சுயேட்சைக் குழுக்கள் என மொத்தமாக 51 குழுக்கள் வேட்புமனுக்களை கையளித்திருந்தன. அவற்றில் இரண்டு அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயேட்சை குழுக்களினது விண்ணப்பங்கள் உரிய முறையில் பூர்த்தி செய்யப்படாத காரணத்தினால் தேர்தல் அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, எங்கள் மக்கள் சக்தி மற்றும் சிறிரெலோ கட்சியின் ப.உதயராசா போட்டியிடவிருந்த  ஜனநாயக தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்களே  நிராகரிக்கப்பட்டுள்ளன.அந்த வகையில் 47 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார். 2024ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்தலில் 6 பாராளுமன்ற ஆசனங்களை பெற்றுக்கொள்வதற்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் 423 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.