மாற்றத்திற்கான மனிதர்களை மக்கள் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்திற்கு அனுப்ப தமிழ் மக்கள் விரும்பம்: தமிழர் சம உரிமை இயக்கம்  தெரிவிப்பு

இன்று தமிழ் தேசிய களத்தில் தூய்மையான மாற்றத்திற்கான மனிதர்களை மக்கள் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்திற்கு அனுப்ப தமிழ் மக்கள் விரும்புகின்றனர். இளையவர்களும் பெண்களும் நிபுணர்களும் இந்த குழுமத்தில் கணிசமான எண்ணிக்கையில் இருக்க விரும்புகின்றனர் அதே நேரம் தமிழ் தேசிய இனம் தன் உரிமைகளை இன்னும் இத்தீவில் பெற்று கொள்ளாத நிலையில் தியாக வேள்வியை கடந்து இன அழிப்பிற்கு உள்ளாகி பரிகார நீதியையும் நிரந்திர சமஷ்டி அடிப்படையிலான தீர்வையும் கோரி நிற்கின்ற சூழலில் கட்சி அரசியலை தாண்டி தமிழ்த் தேசியக்கொள்கை அரசியல் தளமே முன்னெடுக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கினறனர்.

முதிர்ந்த அரசியல் தலைவர்கள் வழிகாட்ட நிபுணத்துவமும் பல் பரிணாம ஆளுமையும் தமிழ்த் தேசிய பற்றுறுதியும் கொண்ட தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் அணி வடகிழக்கில் களம் காண வேண்டும் என்பது இன்று தமிழர்கள் அனைவரது கனவாக இருக்கின்றது. கோட்பாட்டுத் தளத்தில் தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்கள் பொதுச்சபை என்பவற்றின் கருத்தாணைகளை தமிழ்த் தேசிய அரசியல் சித்தாந்தமாக ஏற்றுக் கொண்டு சமகால வாழ்வியல் விடயங்களையும் உள்வாங்கிய தேர்தல் விஞ்ஞாபனத்தை இந்த தமிழ்ப் பொது வேட்பாளர்கள் அணியினர் கொண்டிருப்பர்.

இதற்கான வடகிழக்கு தழுவிய தூய தமிழ்த் தேசிய முகங்களை தொகுதி வாரியாக அனைத்து சமத்துவ பிரதிபலிப்புக்களுடன் கண்டறிய உதவுமாறு தமிழர் சம உரிமை இயக்கம் அனைத்து தமிழ் மக்களிற்கும் அறைகூவல் விடுகின்றது.அனைத்து சிவில் சமுக பிரதிநிதிகள் பல்கலைகழக சமூகம் மாதர் அமைப்புகள் தொழிற்சங்கங்கள் அரசியல் இயக்கங்கள் இதில் தங்கள் பங்களிப்பை இதயசுத்தியுடன் ஆற்ற முன்வருமாறு வேண்டுகின்றோம் எனத் தெரிவித்துள்ளனர். தமிழ் தேசிய நலனை முன்னிறுத்தும் பொது வேட்பாளர்களாக பாராளுமன்ற தமிழ் மக்கள் பிரதிநித்த்துவத்திற்கான தேர்தலை எதிர் கொள்வர். கட்சி அரசியலைக் கடந்த இந்த திட்ட முன்மொழிவிற்கு அனைத்து தமிழர்களது ஆதரவையும் பங்குபற்றுதலையும் வேண்டி நிற்கின்றோம் எனத் தெரிவித்துள்ளனர்.