24 வருடங்களுக்கு பிறகு இலங்கையில் பெண் பிரதமர்

ஆர்.சனத்
அநுரவுக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து
விரைவில் டில்லி செல்லும் சாத்தியம்
டிசம்பரில் பொதுத்தேர்தல்
மீண்டும் களமிறங்கும் ‘யானை’
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க இன்று பதவிப்பிரமாணம் செய்த பின்னர், அமையவுள்ள உத்தேச இடைக்கால அரசாங்கத்தின் பிரதம அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமிக்கப்படவுள்ளார்.
தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று பதவி விலகவுள்ளார் எனவும், அதன்பின்னர் தற்போதைய அமைச்சரவை கலைந்துவிடும் எனவும் தெரியவருகின்றது.
பொதுத்தேர்தல் நடைபெற்று புதிய அரசாங்கம் அமையும்வரை செயற்படும் இடைக்கால அரசில், 4 பேர்கொண்ட உறுப்பினர்கள் 15 அமைச்சுகளை பகிர்ந்துகொள்ளவுள்ளனர் என அறியமுடிகின்றது.
இலங்கை அரசியல் வரலாற்றில் இதற்கு முன்னர் இரு பெண்கள் மாத்திரமே பிரதமர் பதவியை வகித்துள்ளனர். 1960 ஜுலை 21 ஆம் திகதி முதல் 1965 மார்ச் 25 ஆம் திகதிவரை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமர் பதவியை வகித்துள்ளார். உலகில் முதல் பெண் பிரதமர் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது. பிறகு 1970 முதல் 77 வரையும் அவர் பிரதமராக பதவி வகித்தார்.
அதன்பின்னர் 1994 ஆகஸ்ட் 19 ஆம் திகதி முதல் 1994 செப்டம்பர் 12 ஆம் திகதிவரை சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பிரதமராக பதவி வகித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றிபெற்றதும் தனது தயாரான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவை சந்திரிக்கா பிரதமராக்கினார். 1994 நவம்பர் 14 ஆம் திகதி முதல் 2000 ஆகஸ்ட் 9 ஆம் திகதிவரை அவர் பிரதமராக செயற்பட்டார்.
2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் ரத்னசிறி விக்ரமநாயக்க, ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ச, திமு ஜயரத்ன மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் பிரதமர் பதவியை வகித்துள்ளனர்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே 2 தசாப்தங்களுக்கு பிறகு இலங்கையில் பெண்ணொருவர் பிரதமராக பதவியேற்கின்றார். கூடியவிரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு டிசம்பர் மாதத்துக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் வென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களும், இராஜதந்திரிகளும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர
சமூகவலைத்தளங்கள் ஊடாகவும், தொலைபேசி ஊடாக நேரிலுமே இவ்வாறு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய தூதுவரும் அநுரகுமார திஸாநாயக்கவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து, ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் டில்லி வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் என தெரியவருகின்றது.
இந்திய மத்திய அரசின் ஆலோசனையின் பிரகாரமே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி அநுர ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதலாவது வெளிநாட்டு பயணமாக டில்லி விஜயம் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகுமாறு கட்சி உறுப்பினர்களுக்கு ஐ.தே.க. உறுப்பினர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். பெரும்பாலும் யானை சின்னத்திலேயே ஐ.தே.க. தரப்பு பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.