என்னுடைய வாக்கினையும் அளிப்பேன்: கிளநொச்சி தமிழ் பொதுவேட்பாளர் மேடையில் மாவை.சோ.சேனாதிராஜாவின் முழக்கம்

தமிழின விடுதலைக்கான இலட்சியத்துக்கான பயணத்தில் அணிதிரண்டுள்ள பெருந்தொகையான உங்களைப்போன்று என்னுடைய வாக்கினையும் அளிப்பேன் என்ற உறுதிப்பாட்டுடன் தெரிவிக்கின்றேன் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார்.

கிளிநொச்சி பசுமைப்பூங்கவில் திங்கட்கிழமை  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து ‘தமிழ்த் தேசிய இனத்தின் எழுச்சியே தமிழ்த் தேசத்தின் மீட்சி’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் தெரிவித்தார்.

தமிழர்களின் எழுச்சி நிகழ்வான நாளாகவும் தமிழனம் விடுதலை பெறதாத நிலையில் நடைபெறுகின்ற மற்றொரு ஜனாதிபதி தேர்தலாகவும் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறுகின்ற தேர்தல் அமைகின்றது. அவ்விதமான தேர்தலில் எமது விடுதலையையும், அதற்கான இலட்சியப் பயணதுக்காகவும் எங்களுடைய வாக்குகளை பயன்படுத்துவோம் என்ற உறுதியோடு இந்த எழுச்சி நிகழ்வில் பங்கெடுத்துள்ளீர்கள்.

விடுதலைக்கான போராட்டத்தில் மக்களையும், போராளிகளையும் பலிகொடுத்துள்ளோம். அந்த வகையில் நாம் எமது பயணத்திலே உறுதியாக இருக்கின்றோம், அந்தப் பயணத்தினை வலுவானதாக மேற்கொள்ள வேண்டும் என்ற இலட்சியத்துடன் இருக்கும் உங்கள் முன்னிலையில் அந்த இலட்சியத்துக்காக என்னுடைய வாக்கினையும் அளிப்பேன் என்ற உறுதிப்பாட்டுடன் வருகைதந்துள்ளேன்.

அதுமமட்டுமன்றி, நீங்கள் அனைவரும், தமிழர்களின் இட்சியத்துக்கான எழுச்சியை வெளிப்படுத்தும் வகையில் உங்களது வாக்குகளை எதிர்வரும் 21ஆம் திகதி உங்களுடைய வாக்குகளை அளிக்க வேண்டும் என்றும் நான் வலியுறுத்துகின்றேன். கடந்த காலத்தில் எமது விடுதலைக்காக அர்ப்பணிக்கப்பட்ட உயிர்களை நெஞ்சில் நிறுத்தியவனாக  அதற்காக பயணிக்கும் எமது உயிர்களும் எப்போது வேண்டுமானாலும் போகலாம், பணயம் வைக்கப்படலாம் என்பதை நினைவு படுத்தியவனாக, எதிர்கால எமது இலட்சியத்துக்கான பயணத்தில் அர்ப்பணிப்புச் செய்வதற்கு தயாராக உள்ள மக்களுக்கும் நன்றி உடையவனாக தேசமாக எழுச்சி அடைவோம். அதற்காக உழைப்போம் என்று உரைத்து விடைபெறுகின்றேன் என்றார்.