சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பது தொடர்பானதமிழரசுக் கட்சியின் தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை- சத்தியலிங்கம்


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பது தொடர்பான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கூடிய ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான குழு கட்சியின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும், சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைக் காலதாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கான ஒழுங்குகள் குறித்து அவருடன் பேசித் தீர்மானிப்பது தொடர்பாகவும் முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் 16ஆம் திகதி மீண்டும் கூடும் தேர்தல் தொடர்பான குழு, மேற்படி விடயங்கள் குறித்து முன்னேற்ற மீளாய்வைச் செய்து அது பற்றி மக்களுக்கு அறிவிக்கும் என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.