போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளருக்கு தமிழகத்தில் இருந்து ஆதரவு

இலங்கையில் எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், வடக்கு கிழக்கு பகுதியை பிரதிநிதித்துப்படுத்தி போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளருக்கு தமிழகத்தில் இருந்து ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் வருகிற செப்டமர் 21ஆம் நாள் நடக்கவுள்ள குடியரசு தலைவருக்கான தேர்தலில் தமிழீழ மக்களின் விடுதலை, நீதிக்கான கோரிக்கைகளின் குறியீடாக பொது வேட்பாளர் ஒருவரைப் போட்டியிடுகின்றார்.இதன் மூலம் உலகத்திற்கு தமிழ்த்தேசிய இனத்தின் இருப்பையும் விருப்பையும் அறிவிப்பது என்ற நோக்கில் அங்குள்ள விடுதலை ஆற்றல்கள் முன்முயற்சி எடுத்துள்ளன. இதன் பொருட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தேர்தலில் பொது வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

தமிழ் மக்கள் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து வாக்களிக்க வேண்டும் என்பதை ஓர் அறைகூவலாக விடுக்கின்றேன். இம்முயற்சிக்கு நமது ஆதரவை வெளிப்படுத்தும் நோக்கில் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று காலை 11 மணி அளவில் ஊடகச் சந்திப்புக்கு ஒழுங்கு செய்துள்ளோம் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.