நாட்டைக் கட்டியெழுப்ப புதிய திட்டம் : அனுரகுமார திஸாநாயக்க அறிவிப்பு

தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையை மாற்றி நாட்டைக் கட்டியெழுப்ப புதிய திட்டம் அமுல்படுத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.கல்கமுவ நகரில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2048 ஆம் ஆண்டில் இலங்கை அபிவிருத்தியடையும் என தற்போதைய ஜனாதிபதி கூறுகிறார்.

அதுவரையில் மக்கள் பட்டினியால் வாடியிருக்க வேண்டும் என்றா அவர் கருதுகிறார் என கேள்வி எழுப்பியுள்ளார்.மின்சார கட்டணம் 33 வீதத்தினால் குறைக்கப்படும் எனவும், குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு மாதாந்தம் 10000 ரூபா வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலைகள் குறைக்கப்படும் எனவும் உணவு மற்றும் கல்விக்கான பெறுமதி சேர் வரி நீக்கப்படும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.பிணையின்றி கடன் வழங்குவதற்கான அபிவிருத்தி வங்கியொன்று அறிமுகம் செய்யப்படும். செலுத்தப்படாத வரி நிலுவைகள் மீள அறவீடு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.எனவே தற்போதைய சூழ்நிலை மாற்றியமைக்கப்பட்டு புதிய திட்டங்கள் அமுல்படுத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.