உண்மையாகச் செயற்பட்டேன்: வைத்தியத்துறை மாபியாக்களுக்கு பிடிக்கவில்லை:கண்ணீருடன் விடைபெற்றார் வைத்தியர் அர்ச்சுனா

‘யாழ்ப்பாண மக்களுக்காக உண்மையாகச் செயற்பட்டேன். அது வைத்தியத்துறை மாபியாக்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் என்னை இங்கிருந்து விரட்டுகின்றனர். ஆனால், இந்த மக்களின் அன்பு என்பது எனது இதயத்துடிப்பு. இந்த மண்ணில் இருந்து விடை பெறுகின்றேன்’ என்று கவலையுடன் தெரிவித்தார் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா. இன்று கொழும்பு சென்று நாளை அங்கு புதிய நியமனத்தைப் பெற்றுக்கொண்டு நான் முன்னர் கடமையாற்றிய பேராதனை வைத்தியசாலைக்குச் சென்று கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளேன்’ என்றும் அவர் கூறினார்.

சாவகச்சேரியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் எனது குரல்வளையை நசுக்கி எவரும் என்னை அச்சுறுத்தி அடிபணிய வைக்கமுடியாது. மக்களுக்கான எனது பணி எப்போதும் தொடரும். சுகாதார அமைச்சர் தலைமையிலான குழுவின் யாழ். விஜயம் ஒரு நிகழ்ச்சி நிரலுடன் கூடிய கண்துடைப்பு நாடகம் என்பது மட்டுமல்லாமல் ஏமாற்று வித்தையாகும் யாழில் பழிவாங்கப்பட்ட நான் மீண்டும் சுகாதார அமைச்சுக்கு அழைக்கப்பட்டு பேராதனை வைத்தியசாலைக்ககு நியமிக்கப்படவுள்ளேன். இங்கிருந்து இன்றுடன் விடைபெறுகின்றேன். இன்று கொழும்பு செல்கின்றேன். எல்லாம் முடிய மீண்டும் இங்கு வருவேன்’ என்று அவா் தெரிவித்தாா்.