பொலிஸ் அதிகாரமின்றி 13 ஆவது திருத்தம்:  முற்றாக நிராகரிப்பதாக எஸ்.சிறிதரன் தெரிவிப்பு


பொலிஸ் அதிகாரமின்றி 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது குறித்துக் கலந்துரையாடிவருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுவதை முற்றாக நிராகரிப்பதாகவும், அது ஒருபோதும் தமிழர் விரும்பும் அரசியல் தீர்வாக அமையாது எனவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான கருத்துக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் மத்தியில் அவருக்குப் பாரிய பின்னடைவையே தேடித்தரும் எனத் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மறைந்த தலைவர் இரா.சம்பந்தன் பிரிக்கப்படாத ஒருமித்த நாட்டுக்குள் அரசியல் தீர்வைக் கோரியதாகவும், தற்போது அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை பொலிஸ் அதிகாரமின்றி, மத்திய அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட வேறு பல அதிகாரங்களுடன் நடைமுறைப்படுத்துவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் ஞாயிற்றுக்கிழமை இரா.சம்பந்தனின் இறுதிக்கிரியை நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே ஜனாதிபதியின் இக்கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை பொலிஸ் அதிகாரமின்றி நடைமுறைப்படுத்துவது ஓரளவுக்கேனும் ஏற்றுக்கொள்ளத்தக்க அர்த்தமுள்ள அரசியல் தீர்வாக அமையாது எனவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், சம்பந்தன்,  பிளவுபடாத, ஒருமித்த இலங்கைக்குள் அரசியல் தீர்வினைக் கோரியதாக ஜனாதிபதி கூறுகின்றார். இருப்பினும் அவர் பிளவுபடாத இலங்கைக்குள் தமிழர்களைத் தேசிய இனமாக அங்கீகரிக்கக்கூடிய, சுயநிர்ணய அடிப்படையிலான சமஷ்டி முறையிலான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வையே கோரினார். மாறாக அவர் ஒற்றையாட்சிக்குள் அதிகாரப்பகிர்வைக் கோரவில்லை. அவ்வாறிருக்கையில் பொலிஸ் அதிகாரங்களின்றி 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்துக் கலந்துரையாடிவருவதாக ஜனாதிபதி கூறுகின்றார். அது ஓரளவுக்கேனும் ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வாக ஒருபோதும் அமையாது என ஸ்ரீதரன் தெரிவித்தார்.