தம்மிக்க பெரேராவின் வீட்டிற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம்.

பெருந்தோட்ட நிறுவனமொன்றின் தலைவரும், தொழிலதிபருமான தம்மிக்க பெரேராவின் வீட்டிற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் நடாத்தப்படுகின்றது.முன்னதாக இலங்கை தோட்ட துறைமார் சங்கம் கட்டிடத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், இதில் ஆயிரக்கணக்கான பெருந்தோட்ட தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.இதன்போது உருவ பொம்மையை எரித்து போராட்டக்காரர்கள் தமது எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருந்ததுடன், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிக்கும் வகையில் தொழில் அமைச்சரினால் அண்மையில் வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டது. எவ்வாறாயினும், இந்த வர்த்தமானி அறிவிப்புக்கு தடை விதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் முதலாளிமார் சம்மேளனம் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில், குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைகால தடை விதித்தது உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.