விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம்.!

நாளை மறுநாள் (ஜூலை 10) விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவை அடுத்து, அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வரும் ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் கடந்த சில வாரங்களாக விக்கிரவண்டியில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

திமுக சார்பில் அன்னியூர் ராஜா போட்டியிடுகிறார். பாஜக தலைமையிலான NDA கூட்டணி சார்பாக பாமக வேட்பாளர் சி.அன்புமணி போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா போட்டியிடுகிறார். அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது. இதனால் விக்கிரவாண்டியில் மும்முனை போட்டி நிலவி வருகிறது.

இன்று இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையில் அந்தந்த அரசியல் கட்சி தலைவர்கள் வெகு தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரம் செய்து வந்தார். பாமக வேட்பாளரை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்து வந்தார்.  அதே போல நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அந்த கட்சி தலைவர் சீமான் தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தை சத்து வந்தார்.

நாளை மறுநாள் (ஜூலை 10) இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், இன்று (ஜூலை 8) மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவுபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதே போல அரசியல் தலைவர்கள் தங்கள் தேர்தல் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தற்போது நிறைவு செய்துள்ளனர். இன்று மாலைக்கு மேல் வெளியூர் ஆட்கள் தொகுதிக்குள் இருக்க அனுமதியில்லை என்பதால் வெளியூர் அரசியல் கட்சியினர் விக்கிரவாண்டியில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

நாளை மறுநாள் வாக்குப்பதிவு நிறைவுபெற்று ஜூலை 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது