மத்தியப் பிரதேசத்தில் மாயமாகும் பெண்கள்- 3 வருடங்களில் மட்டும் 31,000க்கும் அதிகமான பெண்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்

இந்தியாவின், மத்தியப் பிரதேசத்தில் கடந்த மூன்று வருடங்களில் மட்டும் சுமார் 31,000க்கும் அதிகமான பெண்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு நாளில் 28 பெண்களும் 3 சிறுமிகளும் காணாமல் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் மாத்திரம் 676 பெண்கள் காணாமல் போயுள்ளனர்.

இந்தூரில் 2384 பெண்கள் காணாமல் போயுள்ளனர். ஒரு மாதத்தில் மட்டும் 479 பெண்கள் காணாமல் போயுள்ளபோதும் வெறும் 15 வழக்குகள் மட்டுமே இதுதொடர்பில் பதிவாகியுள்ளன.

சாகர் மாவட்டத்தில் பெண்கள் காணாமல் போனமை தொடர்பில் 245 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின் அடிப்படையில், கடந்த 2019 முதல் 2021 வரையில் கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக பதிவாகியுள்ளது. இதில் பெரும்பாலான பெண்கள் பழங்குடியினர்.

இந்தியாவில் அதிகமாக மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தான் அதிக பெண்கள் காணாமல் போவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

காணாமல் போன பெண்களில் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என தகவல்கள் தெரிவிப்பதோடு, பல பெண்கள் மனநோய், குடும்ப வன்முறை, தகவல் தொடர்பு பிரச்சினை போன்ற காரணங்களால் காணாமல் போவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.