ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது.! தவெக தலைவர் விஜய்.

பகுஜன் சமாஜ்வாடி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது என தவெக தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.

பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவமானது சென்னையை அடுத்த பெரம்பூர் பகுதியில் அவரது வீட்டின் அருகே நிகழ்ந்துள்ளளது. சென்னை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து இறுதி அஞ்சலிக்காக பொது இடத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

தேசிய கட்சியின் மாநில தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் இரங்கலையும், கண்டங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

ஏற்கனவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை போன்ற அரசியல் தலைவர்கள் தங்கள் வருத்தத்தை பதிவு செய்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயும் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

அதில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. ஆம்ஸ்ட்ராங் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இது போன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.