அத்துருகிரிய – துப்பாக்கிதாரிகள் தப்பிச் சென்ற வேன் கண்டுபிடிப்பு!

அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு வந்த துப்பாக்கிதாரிகள் தப்பிச் செல்ல பயன்படுத்திய வேன் ஒன்று புலத்சிங்கள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று (08) மாலை 6.15 மணியளவில் 119 அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய புலத்சிங்கள, அயகம, தெல்மெல்ல பிரதேசத்தில் பாழடைந்த காணி ஒன்றில் இருந்து குறித்த வேன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வேன் அயகமவில் இருந்து புலத்சிங்கள நோக்கி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த வேனில் முன் மற்றும் பின் இலக்கத் தகடுகள் இல்லை எனவும், வருமான அனுமதிப் பத்திரத்தின் பிரதி ஒன்றும் முன் கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று (08) காலை 10 மணியளவில் அதுருகிரிய நகரில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அழகுக்கலை நிலையம் திறப்பு விழாவின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பிரபல வர்த்தகரான 55 வயதான சுரேந்திர வசந்த பெரேரா என்ற கிளப் வசந்த மற்றும் 38 வயதுடைய நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் கொழும்பு 07 மற்றும் அதுருகிரிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் பிரபல பாடகி கே.சுஜீவா உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.