யாழிலிருந்து கொழும்பு சென்ற PPN சொகுசு பஸ் மாங்குளத்தில் விபத்து!! 3 பேர் பலி

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று இரவு 11.10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு பேருந்து ஒன்றின் பின்பகுதியில் பாரவூர்தி ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த பேருந்து ஒன்று பழுதடைந்ததன் காரணமாக ஏ9 வீதியில் 228 வது கிலோமீற்றர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது.

இதன் போது பேருந்தில் வருகை தந்தவர்கள் இறங்கி பேருந்தின் பின்புறமாக நின்று கொண்டிருந்த போது அதே திசையில் வருகை தந்த பாரவூர்தி ஒன்று குறித்த நபர்கள் மீதும் பேருந்தின் மீதும் மோதியுள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களில் இருவரின் நிலை மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.