சிங்கப்பூர் அரசுத் தலைவர் சண்முகரத்னம் திருத்தந்தையுடன் சந்திப்பு

யாழ்ப்பாண தமிழ் வம்சாவழியைச் சேர்ந்த சண்முகரத்னம், சிங்கப்பூரின் ஒன்பதாவது அரசுத்தலைவராக 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 14லிருந்து பதவியிலுள்ளார்.
சிங்கப்பூர் நாட்டின் புதிய அரசுத் தலைவர் தர்மன் சண்முகரத்னம் அவர்கள் ஜூன் 22, சனிக்கிழமையன்று திருத்தந்தையை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

இவ்வாண்டு செப்டம்பர் மாதத் துவக்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் ஆசியப் பயணத்தில் சிங்கப்பூர் நாட்டிற்கும் திருப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இடம்பெற்றிருக்கும் இந்த சந்திப்பின்போது, இரு தலைவர்களும் இப்பயணம் குறித்தும் விவாதித்தனர்.

தன் உயர்மட்ட அதிகாரிகள் குழுவோடு வத்திக்கான் வந்திருந்த சிங்கப்பூர் அதிபர் சண்முகரத்னம் அவர்கள், திருத்தந்தையைச் சந்தித்தபின் திருப்பீடச் செயலகம் மற்றும் திருப்பீட வெளியுறவுத்துறையின் உயர் மட்ட அதிகாரிகளையும் சந்தித்து உரையாடினார்.

சிங்கப்பூரில் திருஅவையின் பணி, சமூகத்தில் அதன் இடம், மற்றும் இடம்பெறவிருக்கும் திருத்தந்தையின் திருப்பயணம் போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டன.

யாழ்ப்பாண தமிழ் வம்சாவழியைச் சேர்ந்த சண்முகரத்னம் அவர்கள், சிங்கப்பூரின் ஒன்பதாவது அரசுத்தலைவராக  கடந்த ஆண்டு, அதாவது 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 14லிருந்து பதவி வகித்து வருகிறார்.