யாழ் மாவட்ட மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுங்கள் :  டக்ளஸ்டம் வேண்டுகோள் விடுத்த சஜித்

யாழ் மாவட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடும்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்குமாறு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சபையில் வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை விசேட கேள்வியொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை, பொலிகண்டி என்ற இடத்தில் அதிகளவான மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். என்றாலும் மீன்பிடி படகுகளுக்கு நங்கூரமிடும் வசதிகள் சரியாக ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த இடத்தின் ஆழம் தோண்டி மீன்பிடி படகுகளை நங்கூரமிடுவதற்குக்கான வசதிகள் செய்து தரப்படும் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டாலும், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.

இதுதொடர்பாக கவனம்செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 2017 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டதன் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் இழுவை மடி  மூலம் மீன்பிடியில் ஈடுபடுதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் மீன் வளத்திற்கும், கடற் சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் நிலைமைகள் ஏற்படுகின்றன. நாட்டின் ஏனைய பகுதிகளில் இழுவை மடியை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், யாழ்ப்பாணத்தில் இது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கடற்றொழில் திணைக்களம் மற்றும் துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு அறிவித்தாலும் இதற்கு தீர்வு காணப்படவில்லை. யாழ்ப்பாணத்தில் இழுவை மடி  மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என கேட்கிறேன்.

இது குறித்து மீன்பீடித்துறை அதிகாரிகள் மௌனம் காப்பது ஏன் என்ற பிரச்சினையும் எழுகிறது. அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டிருக்குமானால் அது கடற்றொழில் சட்டத்தை மீறிய செயலாகும் .எனவே இழுவை மடி பயன்டுத்தி மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் மீனவர்கள் அதனை சட்ட ரீதியில் மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம்  அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.