அனைத்து அமைப்புகளும் பொதுவேட்பாளரை ஆதரிப்பதாக கிளிநொச்சியில் அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்து பொது அமைப்புகளும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்துவதற்காக உழைத்துக் கொண்டிருக்கும் மக்கள் அமைப்பாகிய, தமிழ் மக்கள் பொதுச்சபையின் ஒழுங்கமைப்பில்   கிளிநாச்சி கூட்டுறவு மண்டபத்தில் நேற்று காலை 9.30 மணியளவில் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இதில் சுமார் 200க்கும் குறையாத வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டிருந்தன. விவசாய அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் இதில் கலந்து கொண்டன.

தமிழ் மக்கள் பொதுச்சபை சார்பில் நிலாந்தன், பேராசிரியர் கணேசலிங்கம், யோதிலிங்கம், ரவீந்திரன் இந்திரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இதில் கலந்து கொண்டவர்கள் பெருமளவு கேள்விகளை கேட்டார்கள். முடிவில், அனைத்து அமைப்புகளும் பொதுத்தமிழ் வேட்பாளரை ஏற்றுக் கொள்வதாக பகிரங்கமாக அறிவித்தன.