நாம் தமிழர் கட்சியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் :  அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவிப்பு

மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்திருப்பதால்,  அந்தக் கட்சியினரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. இந்தக் கூட்டங்களில் பங்கேற்று ப. சிதம்பரம் பேசினார்.

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது. பிற கட்சிகளைவிட மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியை இளம் வாக்காளர்கள் அதிகமாக ஆதரித்துள்ளனர். ஆனால், இந்தக் கட்சி எந்தத் தொகுதியிலும் வைப்புத்தொகையை திரும்பப் பெற முடியவில்லை. இருப்பினும், நாம் தமிழர் கட்சியினரிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இளம் வாக்களர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் செயல்பட வேண்டும்.

சிவகங்கை மக்களவைத் தொகுதி முழுவதும் வாக்காளர்களைச் சந்தித்து நன்றி சொல்ல வேண்டும். மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதியில் இன்னும் 6 மாதங்களில் 5 ஆயிரம் பேரை காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.