இலங்கையில் தமிழர்களுக்கான தனி நாட்டை உருவாக்கித் தர வேண்டும்: மதுரை ஆதீனம் பிரதமர் மோடியிடம் கோரிக்கை.

இலங்கையில் தமிழர்களுக்கான தனி நாட்டை பிரதமர் நரேந்திர மோடி உருவாக்கித் தர வேண்டும் என மதுரை ஆதீனம் ஹரிஹர ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்தியாவின் பிரதமராக 3-ஆவது முறையாக நரேந்திர மோடி பதவி ஏற்றுள்ளார். அவருக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளேன். மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளும் நல்ல வாக்குகளைப் பெற்றுள்ளன. இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட காரணமானவர்களும் வெற்றி பெற்று விட்டார்களே என்ற மன வருத்தம் எனக்கு உள்ளது.

தற்போது,  3-ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியிடம் இரண்டு கோரிக்கைகளை முன்வைக்கிறேன். காங்கிரஸ் ஆட்சியின் போது, இந்திரா காந்தி இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்த கச்சத்தீவை மீட்க வேண்டும். கச்சத்தீவு மீட்டெடுக்கப்பட்டால், தமிழகத்தின் மீன் வளம் அதிகரிக்கும்.

எனவே, கச்சத்தீவை மீட்டு, தமிழகத்தோடு இணைக்க வேண்டும். அடுத்து,  இலங்கையில் வசித்து வரும் தமிழ் மக்களைப் பாதுகாக்கும் வகையில், அங்கு தமிழர்களுக்கான தனி நாட்டை பிரதமர் மோடி உருவாக்கித் தர வேண்டும். கடந்த 60 ஆண்டுகளாக கச்சத்தீவு விவகாரம் குறித்து யாரும் பேசவில்லை. ஆனால், தேர்தல் நேரங்களில் மட்டுமே கச்சத்தீவு விவகாரம் குறித்து கட்சிகள் பேசுகின்றன  என மதுரை ஆதீன மடத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.