பெரும்பான்மையை கூட தொட முடியாத பாஜக.! மு.க.ஸ்டாலின் விமர்சனம்.

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி தேசிய ஜனநாயக கூட்டணி 290 இடங்களிலும், I.N.D.I.A கூட்டணி 235 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. அதில் பல இடங்களில் வெற்றி உறுதிசெய்யப்பட்டு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரி தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்று வருகின்றனர். அதற்கான அறிவிப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் இன்று திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்கள் மத்தியில் வெற்றி குறித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறுகையில், திமுகவின் வரலாற்று சிறப்பு மிக்க இந்த வெற்றியை கலைஞருக்கு காணிக்கையாக்குகிறேன். 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என பாஜகவினர் கூறியிருந்தர்கள். இப்போது பெரும்பான்மையை கூட தொட முடியாத நிலையில் உள்ளனர்.

கருத்து கணிப்பு என்ற பெயரில் உளவியல் ரீதியாக தாக்குதலை செலுத்தியது பாஜக.
இருப்பினும், ஆட்சியமைக்க தேவையான தொகுதிகளை பெற முடியாத நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. இதுதான் எங்கள் கூட்டணியின் வெற்றி.

பாஜகவின் பலம், அதிகார துஷ்புரோயகம், ஊடக பரப்புரை என அனைத்தையும் உடைத்து எரிந்து நாம் பெற்றுள்ள வெற்றி வரலாறு சிறப்புமிக்க வெற்றியாகும். கடந்த தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். தற்போது மீதமுள்ள 1 தொகுதியையும் சேர்த்து 40 தொகுதிகளையும் வெற்றி பெற வைத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி என தனது பேச்சில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.