ஜீவனின் அதிரடி நடவடிக்கையின் பின்னர் சமரசத்திற்கு வந்த களனிவெளி பெருந்தோட்ட கம்பனி.

செ,திவாகரன்

உடரதல்ல தோட்டத்தில் 280 தொழிலாளர்கள் கட்சி பேதமின்றி களனிவெளி பெருந்தோட்ட நிர்வாகத்தின் தான்தோன்றி தனமான போக்குக்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தினை நடத்தி வந்தனர்.

உடரதல்ல தோட்டத்தில் தேயிலையை அழித்துவிட்டு அங்கு கோப்பியை பயிரிட களனிவெளி பெருந்தோட்ட நிர்வாகம் கையாண்ட தான்தோன்றி தனத்தை எதிர்த்தே இந்த பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இது தொடர்பான பேச்சுவார்த்தை நுவரெலியா உதவி தொழில் ஆணையாளர் அலுவலகத்தில் (30) வியாழக்கிழமை இடம்பெற்றது.

இதன்போது உடரதல்ல தோட்டத்தில் கோப்பி பயிரிடுவதற்கு தேயிலை மரங்களை பிடுங்க தோட்ட நிர்வாகம் கொண்டுவந்த இயந்திரத்தை தடுத்த தோட்ட தலைவர்கள் மூவரை பணியிடை நிறுத்தியிருந்தனர்.

முதலில் பணியிடை நிறுத்தப்பட்ட மூவருக்கு தொழில் வழங்க வேண்டும் என இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தோட்ட நிர்வாகம் இணக்கப்பாட்டுக்கு வரவில்லை. இதனால் பேச்சுவார்த்தை இனக்கபாடின்றி முடிவடைந்தது.

அதேநேரத்தில் உடரதல்ல தோட்ட மக்களுக்கு தீர்வு கிட்டும் வரை களனிவெளி பெருந்தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக அதிரடியாக தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்படுவதாக இ.தொ.கா களம் இறங்கியது.

அதேநேரம் களனிவெளி நிர்வாகத்துக்குரிய தோட்ட தொழிற்சாலைகளில் இருந்து தேயிலை தூளை விற்பணைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைக்கு இ.தொ.கா தடை விதித்தது.