ஜனாதிபதித் தேர்தல் இந்த வருடம் நடைபெறும்:  பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் இந்த வருடம் நடைபெறும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் இன்று புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தேர்தல் குறித்த அரசின் நிலைப்பாடு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும்.

பொறுப்பற்ற கூற்றுகள் மூலம் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த ஜனநாயக ஆட்சியில் சந்தர்ப்பம் கிடைக்காது. கலந்துரையாடப்படாத பொறுப்பற்ற கருத்துக்களை முன்வைத்து, நாட்டில் குழப்பமான நிலையை தோற்றுவிக்கின்றமை ஜனநாயக நாட்டிற்கு சிறந்ததல்ல’ என அவர் மேலும் தெரிவித்தார்.