இலங்கை குடியுரிமையை பெற வழி முறை: வெளியானது வர்த்தமானி அறிவிப்பு

இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர்கள் மற்றும் வெளிநாட்டு குடியுரிமையை கொண்டவர்கள், குடியுரிமையை கைவிட்டு சென்றவர்கள் உள்ளிட்டோருக்கு இலங்கையில் நிரந்தர வதிவிடத்தை பெற்றுக்கொள்ளும் புதிய சரத்துக்கள் அடங்கிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட நபர் அல்லது குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 19, 20 அல்லது 21 இன் கீழ் குடியுரிமை நிறுத்தப்பட்டவர், அதே போல் ஒரு வெளிநாட்டு வாழ்க்கைத் துணைவர் திருமணமாகி 6 மாதங்களுக்குப் பிறகு புதிய விதிமுறைகளின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான விதிமுறைகள் பொது பாதுகாப்பு அமைச்சினால் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளதுடன், இந்த உத்தரவுகள் நிரந்தர வதிவிட விஸா ஆணைகள் 2024 என அறியப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலின் படி, இலங்கையில் திருமணமான ஒருவருக்கு 5 வருடங்களுக்கு முன்னர் திருமணம் இரத்து செய்யப்பட்டால், நிரந்தர வதிவிட அந்தஸ்து தானாகவே இரத்து செய்யப்படும்.

குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 19, 20 அல்லது 21 இன் கீழ் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முதன்மை விண்ணப்பதாரருக்கு 1,000 டொலர் கட்டணம் அறவிடப்படும் என்பதுடன், இலங்கையர் அல்லாத வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகளுக்கு 400 டொலர் கட்டணம் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய விண்ணப்பப் படிவம் 2024 ஆண்டு மே மாதம் 7ஆம் திகதி வர்த்தமானி எண் 2383/17 மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.