பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் தகுந்த பாடத்தினை புகட்டுவார்கள்: உதய கம்மன்பில தெரிவிப்பு

நாட்டு மக்கள் தமது பக்கமே நிற்கின்றார்கள் என நினைத்துக் கொண்டுள்ள பொதுஜன பெரமுனவுக்கு இந்த ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தினை புகட்டுவார்கள் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பொதுவேட்பாளராக களமிறக்குமாறு ராஜபக்ஷர்களிடம் வலியுறுத்தியுள்ளார்கள்.

இதன் காரணமாக பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்கள் ஆணையைப்பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பண்டாரநாயக்க குடும்பத்துக்கு ஏற்பட்ட அரசியல் நிலைமை தமக்கும் ஏற்படுமோ என ராஜபக்ஷர்கள் அச்சமடைகிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தாம் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும், அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் முதலில் நடத்தப்படும் என ஜனாதிபதி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்தினால் அது ஜனாதிபதிக்கும், நாட்டுக்கும் பாதகமாக அமையும் என சுட்டிக்காட்டிய கம்மன்பில, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்துமாறு பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க, அதற்கு 113 உறுப்பினர்களின் ஆதரவை கையெழுத்துக்கள் ஊடாக உறுதிப்படுத்துமாறும், நாடாளுமன்றத்தை அதன் பின்னர் கலைக்கலாம் எனவும் பசிலிடம் குறிப்பிட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.எனினும் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு 113 உறுப்பினர்களின் ஆதரவை பெறுவதற்கு பஷில் ராஜபக்ஷ எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதி பக்கம் இணைந்துள்ளனர். ஆகவே அந்த கட்சியின் தலைவர் யார் என்பது தற்போது கேள்விக்குறியாக உள்ளது எனவும் கம்மன்பில தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.