இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட  ஐ.எஸ் ஐ.எஸ்ச் சேர்ந்தவர்கள் என கருதப்படும் இலங்கையர்கள் தொடர்பில்  புலனாய்வு பிரிவு உடனடி விசாரணை

ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என கருதப்படும் இலங்கையர்கள் நால்வர் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்து இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவு உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த சந்தேகநபர்களின் பின்னணி குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காகவும், அவர்கள் உண்மையிலேயே ஐ.எஸ் ஐ.எஸ் சந்தேக நபர்களா என விசாரணைகளை மேற்கொள்வதற்காகவும் இந்தியாவின் புலனாய்வு பிரிவினரிடம் இலங்கை புலனாய்வு பிரிவினர் மேலதிக தகவல்களை கோரியுள்ளனர்.

எனவே இந்திய அதிகாரிகள் தகவல்களை வழங்கியதும் உடனடியாக மேலதிக நடவடிக்கைகளிற்கான அடுத்த கட்ட விசாரணைகள் ஆரம்பமாகும் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த விடயங்கள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கை பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.அத்துடன் இந்த தகவல்களை தீவிரமாக எடுத்துள்ளதாகவும், சந்தேக நபர்கள் குறித்த மேலதிக தகவல்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை,இந்த அச்சுறுத்தலை கையாள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அதிகாரிகளுடன் இணைந்து முன்னெடுத்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.தற்போது அஹமதாபாத் விமானநிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதுமட்டுமன்றி கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் கையடக்க தொலைபேசிகளில் இருந்து அழிக்கப்பட்ட உரையாடல்கள், செய்திகளை பொலிஸார் மீட்டுள்ளனர் எனவும் அவர்கள் இலக்கை நோக்கி செல்வதற்கு முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.