தமிழர்கள் தமிழில் வழிபட தமிழர்களே தடை : டென்மார்க்கில் செந்தமிழ் சைவ அருட்சுனையர் மீதான தாக்குதலுக்கு கண்டனம்

டென்மார்க்கில் அமைந்துள்ள இந்து ஆலயத்திற்குள் சைவ அருட்சுனையர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திருகோணமலையில் இருந்து சென்ற செந்தமிழ் அருட்சுனையர் சிவத்திரு. தம்பிரான் சுவாமிகள் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பாக வேல்முருகன் திருக்கோவில் நிர்வாகம் டென்மார்க் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது. இந்த தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர்கள் பல தடயங்களையும் விட்டுச்சென்றுள்ளதுடன்இ பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த தாக்குதலை சைவநெறிக்கூடமும்  பொது அமைப்புக்களும் கண்டித்து கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

அறிக்கையில்  ‘தமிழர்கள் தமிழில் வழிபட தமிழர்களே தடையாக இருக்கும் இப்பேரிடர் நிகழ்வு தமிழுக்காக உயிர்நீத்த வலி சுமந்த மே மாதத்தில் நிகழ்ந்திருப்பது பெரும் கொடுமை. இந்த வன்முறைக்கு அறிவு படைத்த நற்தமிழ்ச் சமூகம் தொடர்ந்தும் தமிழ் வழிபாடு டென்மார்க் வேல்முருகன் திருக்கோவிலில் நடைபெற வழி செய்து வன்முறைக் குழுவிற்கு பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.இயற்கையும் இறையும் அறமும் கொடுமைக்காரர்களுக்கு தண்டனை வழங்கும்’ என கண்டன அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.