ஜனாதிபதி ரணில் அழைப்பை ஏற்று எலான் மஸ்க் இலங்கை வரவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை ஏற்று டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரும் எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் அவரது ஸடார் லிங்க் செயற்கைக்கோள் (Starlink Satelite) இணைய சேவையை இலங்கையில் தொடங்குவதற்காக இந்த ஆண்டு இலங்கைத்தீவுக்கு வருகை தரவுள்ளதாக ஆங்கிலப் பத்திரிகை டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதியின் காலநிலை விவகாரங்கள் தொடர்பான ஆலோசகரான ருவான் விஜேவர்த்தன, நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தோனேஷியாவின் பாலித் தீவில் எலன் மஸ்க்கைச் சந்தித்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி,செயற்கை நுண்ணறிவு -AI, மற்றும் உலக அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தோனேஷியாவின் பாலித் தீவில் தொடங்குவதற்கு எலன் மஸ்க் சென்றபோதே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

எலன் மஸ்க்கின் இலங்கை வருகைக்கான திகதிகள் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. இலங்கை அரசாங்கம் எலனின் குழுவுடன் தொடர்புகொண்டு இதற்கான ஏற்பாடுகளை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை தனது ஒப்புதல் செயல்முறையை எந்தளவு விரைவுபடுத்துகிறதோ அதைப் பொறுத்தே எலன் மஸ்க்கின் இலங்கை வரவு அமையும். இந்த ஆண்டின் இறுதியில் அவர் இலங்கை வருவார் என்று தற்காலிகமாக விவாதிக்கப்பட்டது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த செயற்கைக்கோள் சேவையை இலங்கையிலும் தொடங்குவதற்கான விண்ணப்பத்தை இலங்கை ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தார் எலன் மஸ்க்.

இதனை செயற்படுத்துவதற்கு ஜனாதிபதியும் ஒப்புக்கொண்டுள்ளார்.

இலங்கையின் கிராமியப் பகுதிகளின் கல்வி அபிவிருத்திக்கு இந்த இணைய சேவை பெரிதும் உதவியாக இருக்கும் என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார் என தெரிவிக்கப்படுகிறது.