ஈரான் ஜனாதிபதி மறைவு- ஜனாதிபதி ரணில் இரங்கல் தெரிவிப்பு

ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள இரங்கலில்,

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் பல மூத்த  அதிகாரிகளின் துயர மரணத்தால் இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளது.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அரசுக்கும், ஈரான் மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் மறைந்த ஈரான் ஜனாதிபதி ரைசியின் குடும்பத்தினருடனும் ஈரான் மக்களுடனும், உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ஈரானின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட உமா ஓயா பலநோக்குத் திட்டத்தை மக்கள் பாவனைக்காக கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.