சென்னையை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ திரில் வெற்றி.


நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 39-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் நாணய சுழற்சயில் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதன் காரணமாக சென்னை அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது. தொடக்கத்தில் களமிறங்கிய ரஹானே 1 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதன் பின் டேரில் மிச்சேல் வழக்கம் போல பெரிதாக ஓட்டங்கள் எடுக்காமல் 11 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதனை தொடர்ந்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜாவும் அடிக்க முயன்று 16 ஓட்டங்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். ஒரு பக்கம் களத்தில் ருதுராஜ் பொறுமையாகவும், தேவை படும் நேரத்தில் அதிரடியாகவும் விளையாடி கொண்டிருந்த்தார். அதன் பிறகு ஷுவம் துபே, ருதுராஜுடன் அருமையான கூட்டணி அமைத்தார்.

இருவரின் அதிரடியில் சிஎஸ்கேவின் ஸ்கோர் உச்சத்தை எட்டியது. சிறப்பாக விளையாடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சதம் அடித்தார். அதே போல் அவருடன் விளையாடிய சிவம் துபே சிக்ஸர் மழைகளை பொழிந்தார். அதனால் அவரும் அரை சதம் கடந்து விளையாடினார். இருவரும் மிகச்சிறப்பாக லக்னோ அணியின் பவுலர்களை சிதறிடித்தனர்.

கடைசி இரண்டு பந்து இருக்கையில் ‘தல’ தோனி, தூபேவின் ஆட்டமிழப்புக்கு பின் வந்து கடைசி பந்தை எதிர்கொண்டு அதிலும் ஒரு நான்கு ஓட்டங்கள் அடித்து அசத்தினார். இதன் காரணமாக 20 ஓவரில் 4 விக்கெட் இழந்து 210 ஓட்டங்கள் எடுத்தனர். 211 என்ற இமாலய இலக்கை எடுப்பதற்கு லக்னோ அணி களமிறங்கியது. முதல் ஓவரிலேயே தீபக் சஹாரின் சிறப்பான பந்தில் அதிரடி வீரர் டிகாக் ஆட்டமிழந்தார் . அதன் பின் கே.எல். ராகுல் சில அதிரடியை காட்டி 16 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதனை தொடர்ந்து மார்கஸ் ஸ்டோய்னிஸ் சிறப்பாக விளையாடி அணிக்கு ஓட்டங்கள் சேர்த்தார். மேலும், இம்பாக்ட் வீரராக வந்த தேவதூத் படிக்கல் 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஒரு முனையில் நன்றாய் விளையாடிய ஸ்டோய்னிஸ் அரை சதம் கடந்து லக்னோ அணிக்கு உறுதுணையாக நின்று வலுசேர்த்து கொண்டிருந்தார். அவருடன் நிக்கோலஸ் பூரன் இணைந்து அணிக்கு ஓட்டங்கள் சேர்த்து கொண்டிருந்தார்.

அதன்படி 16-வது ஓவரில் நிக்கோலஸ் பூரன் 2 சிக்ஸர் , 1 பவுண்டரி என மொத்தம் 20 ஓட்டங்கள் குவித்து சென்னை ரசிகர்களுக்கு பதட்டமான சூழலை உருவாக்கினார். அடுத்த ஓவரை பத்திரனா வீசினார். அதில் 3 -வது பந்தில் அதிரடியாக விளையாடி வந்த பூரன் சிக்ஸர் அடிக்க முயன்றபோது ஷர்துல் தாக்கூரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார் .

அதே நேரத்தில் மறுபுறம் விளையாடி வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் சிறப்பாக விளையாடிய 56 பந்தில் சதம் விளாசி கடைசிவரை களத்தில் 124* ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். இறுதியாக லக்னோ அணி 19.3 ஓவரில் 4 விக்கெட்டைகளை இழந்து 213 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை மற்றும் லக்னோ அணிகள் தலா எட்டு போட்டிகளில் விளையாடி உள்ளனர். அதில் லக்னோ அணி 5 போட்டியில் வெற்றியும், மூன்று போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. அதே நேரத்தில் சென்னை நான்கு போட்டிகளில் தோல்வியும், நான்கு போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளது.